Monday, October 26, 2009

'பிஞ்சு மனசு' முதலாவது பாடல் இசைத்தட்டு வெளியீட்டு விழா

நீண்ட வருடங்களின் பின்னர் நான் கற்ற எனது கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. பல நல்ல மாற்றங்களைக் கட்டடங்களிலும் பூந்தோட்டங்களிலும் காணமுடிந்ததில் மகிழ்ச்சி.

எனது சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லாவின் 'பிஞ்சு மனசு' எனும் முதலாவது பாடல் இசைத் தொகுப்பின் இருவட்டு (Audio CD) வெளியீட்டு விழா 23-10-2009 அன்று கல்லூரி மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இலங்கை, மடவளை பஸாரைச் சேர்ந்த கவிஞர் நிஸார் எழுதி பாத்திமா ஷம்லா பாடிய இச் சிறுவர் பாடல்களை இசைத்தட்டு இருவட்டாக, விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவைப் பணிப்பாளர் திரு.Z.S.சிராஜ் லுத்ஃபி வெளியிட்டு வைத்தார்.

தொகுப்பிலிருந்து ஒரு பாடல் கீழே...
(இப் பாடலை வலையேற்ற உதவிய நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி !)



இந் நேரத்தில் விழாவுக்கு நேரில் சமூகமளித்தும், தொலைபேசி, மின்னஞ்சல்கள் மூலமும் தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

Thursday, October 15, 2009

புதிய கவிதைத் தொகுப்பு 'அபராதி'



இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்கிறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார [அழிவு] அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெரும் கருணையை தன்னோடு எடுத்துச்செல்ல விரும்புகின்றன அவரது கவிதைகள். 'கின்னரர் தம் இசையிழந்த நிலமெங்கும்' தாம் பெற்றெடுத்தவர்களைப் பறிகொடுத்த பெண்களின் ஒப்பாரி அலைந்துகொண்டிருப்பதை, தனக்கு வரம்புகளிடும் ஆக்கிரமிப்பாளர்களது கிரீடங்களை மறுத்தவாறு, அவர் பாடுகிறார். அவரது சொற்களில் இருக்கிற சகோதரத்துவமும் அன்பும் அதிகாரமற்ற உலகிற்கான அழைப்பாக ஒலிக்கின்றன.
எனும் பின்னட்டைக் குறிப்போடு 10-10-2009 அன்று வெளிவந்திருக்கிறது கவிதாயினி பஹீமா ஜஹானின் அடுத்த கவிதைத் தொகுப்பு. 


'ஒரு கடல் நீரூற்றி' எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வாசகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வடலி வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அபராதி'.

'அபராதி' எனும் தொகுப்புத் தலைப்பிற்குரிய கவிதை, ஈழத்தின் தற்போதைய நிதர்சன நிலையை அப்பட்டமாக எடுத்தியம்பியிருப்பதால் மனதில் இனம்புரியாதவொரு சஞ்சலத்தை விதைத்துவிடுகிறது. தொகுப்பிலுள்ள மற்ற எல்லாக் கவிதைகளும் பல விதமான உணர்வுகளை, ஞாபகப்படிமங்களை உதிக்கவும் மீளவும் செய்துவிடுவதோடு  நீங்காவண்ணம் மனதில் பதிந்தும் விடுகின்றன. எனவே இத் தொகுப்பும் வாசகரிடையே பரவலான வரவேற்பைப் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

தொகுப்பை இணையத்தில் இங்கு வாங்கலாம்.
இந்தியாவில் இருப்பவர்கள் வடலி பதிப்பக உரிமையாளர் திரு.அகிலனைத் தொடர்புகொள்வதன் மூலம் இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
அவரது தொலைபேசி இல - +919840726807

அன்புச் சகோதரி மற்றும் கவிதாயினிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அடுத்த தொகுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்