Thursday, December 1, 2011

பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்


            டந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று வந்தது. சுகவீனமுற்று இருந்திருக்கிறார். நீரிழிவும் இன்னும் அனேக வியாதிகளும் இருந்திருக்கின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்துத்தான் மரணம் சம்பவித்ததென உடலைக் கொண்டு வந்த உறவினர்கள் கூறினர். இருக்கலாம். காவல்துறை அதிகாரிகள் அதிகமாகக் கோபப்படுவார்கள் அல்லவா? கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா என்ன?

            'எம்பாம்' பண்ணுவதற்காக உடலை வெட்டிய பிறகுதான் காரணம் புரிந்தது. இரத்த அழுத்தம் எனச் சொன்னதற்கு மேலதிகமாக வயிற்றிலும் இரைப்பையிலும் அதிகளவிலான நீர் இருந்தது. சாதாரணமாக அவ்வாறு தண்ணீர் உருவாவது மதுபானப் பாவனையால்தான். இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த போத்தல்கள் இல்லாமல் தொடர்ந்து கடமை புரிய முடியாதே. அவர்கள் கேட்பதுவும் பணம் இல்லையென்றால் போத்தல்கள்தானே (எல்லோரையும் சொல்லவில்லை.) அவ்வாறிருக்கையில் இவ்வாறான நோய்கள் வருவது புதுமையும் இல்லை.

            காவல்துறை அதிகாரியொருவரை 'எம்பாம்' செய்ய நேரும் எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்ணும் அசிங்கங்களுக்கேற்ப அவர்களுக்கு வருவதும் அசிங்கமான நோய்களே என எனக்குத் தோன்றும். 'தெய்வம் நின்று கொல்லும்' எனச் சொல்வது இதற்குத்தான்.

            ன்று பதினான்கு வயதேயான சிறுமியொருத்தியைக் கொண்டு வந்தார்கள். துணியால் உடலைச் சுற்றி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்து போயிருந்தாள். உடல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. முழுதாக எரிந்து போயிருந்தது. தோட்டமொன்றில் வேலை செய்யும் தமிழ் தாயொருவரதும் தந்தையொருவரதும் மூன்றாவது பிள்ளை.

            காதல் தொடர்பொன்று இருந்து அது முறிவடைந்ததால் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாள் என அவளது உடலைக் கொண்டு வர லயன் அறைக்குச் சென்றிருந்தபோது அவளது தந்தை கூறினார். பாதிக் கரிக்கட்டையாக இருந்த உடலை வாகனத்தில் ஏற்றும்போது பிள்ளைகள் இவ்வாறு செய்துகொள்வதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாரென்ற கேள்வி எனக்குத் தோன்றியது.

            விசாரித்துப் பார்க்கையில் இந்தச் சிறுமி தொலைக்காட்சிக்கு அடிமையாக இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகியது. மாலையில் ஒளிபரப்பாகும் தொடர்நாடகங்களுக்கு அடிமையாக இருந்திருக்கிறாள். காதலிப்பது எப்படி என்பது பற்றித்தானே அதில் இருக்கிறது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள், அப்பாக்கள், பிள்ளைகள் எல்லோருமே ஒன்றாக அமர்ந்திருந்து காதலிப்பது எப்படி எனப் பார்க்கிறார்கள். இதுதான் வாழ்க்கையென இப் பிள்ளைகள் நினைத்துக் கொள்கிறார்கள். பதினான்கு வயதுச் சிறுமியொருத்தி காதல் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாதாரணமானதொரு விடயமாக ஆகி விட்டது.

            கடந்த வாரமும் இதே வயதையுடைய ஒரு சிறுவனை 'எம்பாம்' செய்ய நேர்ந்தது. விஷம் உண்டதால் அம் மரணம் நிகழ்ந்திருந்தது. *இத் தொடர் நாடகங்கள் ஏற்படுத்தும் பாரியதொரு அழிவை கண்டுகொள்ளாத, தேசத்தை வழிநடத்திச் செல்லும் பெருந்தலைகளுக்கு 'நீ' , 'உனது' போன்ற வசனங்கள் மட்டும் மோசமான சொற்களாகத் தோன்றுவதுதான் புதுமையாக இருக்கிறது.  இப் பெருந்தலைகளின் உடல்களை வெட்டக் கிடைக்குமெனில் என்னால் சொல்ல முடிந்திருக்கும் 'இவர்களது மூளை எங்கிருக்கிறது? எவ்வளவு சிறியதாக இருக்கிறது' என்பது பற்றி.

*இலங்கையில் ஒளிபரப்பப்படும் சிங்களத் தொடர் நாடகங்களில் 'நீ', 'உனது' போன்ற வசனங்களை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- தில்ஷான் எகொடவத்த
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# திண்ணை

Thursday, November 17, 2011

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான்.

    "எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது."

    "எங்கே போகலாம்?"

    "எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்."

    சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட நானும் நண்பனும் பிரதான பாதையில் நுழைந்தோம்.

    "எங்கே போகிறாய்?" - கேள்வி என்னுடையது.

    " சும்மா இருக்கும் நாட்களில் போவதற்கு நல்லதொரு இடம் இருக்கிறது. எனது பல்கலைக்கழகத் தோழன் இப்ப ஒரு டொக்டர். எங்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தவன். வா..வா என்று ரொம்ப காலமாகக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்."

    வெலிவேரிய பிரதேசத்தைக் கடந்து கொஞ்ச தூரம் சென்று குறுக்குத் தெரு சிலவற்றில் எனது நண்பன் அடிக்கடி வந்து செல்லும் ஒருவனைப் போல வண்டியைத் திருப்பினான். எனினும் நண்பன் வழி தவறியிருந்தான். நாம் மீண்டும் பிரதான பாதைக்கு வந்து நண்பன், யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பெற்ற அறிவுருத்தலின் படி வேறொரு குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தோம். விசாலமானதொரு நுழைவாயில் கதவருகே மோட்டார் சைக்கிள் நின்றது. நண்பனின் தொலைபேசி அழைப்புக்கிணங்க அப் பெரிய நுழைவாயில் கதவு திறந்தது.

    "ஐயா ஒரு சின்ன வேலையில் இருக்கிறார். உங்களுக்கு அங்கே வரச் சொன்னார்."

    எனது நண்பனின் வைத்தியத் தோழன், நாங்கள் போகும்போது வீட்டினுள்ளேயே அமைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை அறைக்குள் பெரியதொரு வேலையில் ஈடுபட்டிருந்தார். எனவே வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிரண்டில் அமர்ந்து நாம் காத்திருந்தோம். வைத்திய நண்பனின் சேவகன் தந்த தேனீரைச் சுவைத்தபடி அவர் வரும்வரையில் ஒரு பரவசத்தோடு நான் இருந்தேன்.

    நாங்கள் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் கழிந்த பின்னர், எனது நண்பனின் தோழன் கைகளிரண்டையும் துடைத்தபடி, மிகுந்த சாரமுள்ள மதுபான போத்தலொன்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார்.

    "தாமதத்துக்கு மன்னிக்கவும்..தெரியாதா இனி? "

    எனச் சொன்ன வைத்தியத் தோழன், நான் யாரென வார்த்தையேதுமின்றித் தலையசைத்து வினவினார். நான் யாரெனத் தெரிந்துகொண்ட பிற்பாடு என்னை வரவேற்றதோடு, தான் எடுத்து வந்திருந்த மதுபான போத்தலின் மூடியை அகற்றி, பருகத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பின்னர் மதுபானத்தின் வெறியில் அவர் உளர ஆரம்பித்தார். ஆரம்பமும் முடிவும் அற்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    "எனக்கு இது இப்ப வேணாம்னு போயிடுச்சுடா.. செய்றதுக்கு ஒண்ணுமில்லாம செஞ்சுட்டிருக்கேன். நிறுத்தவும் முடியாதுதானே.விஷயம் வெளியே தெரிஞ்சுடுச்சுன்னா.... தெரியும்தானே."

    நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.

    "அதிகமா வாறது ஸ்கூல் பொண்ணுங்க..வேலையை சிக்கலாக்கிக் கொண்டு கடைசிக்கட்டத்துல வந்து அழுதுட்டிருப்பாங்க."

        ஆச்சரியத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்த நான் அக் கேள்வியைக் கேட்டேன்.

    " எதைப் பற்றிச் சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல."

    நன்கு வெறியேறியிருந்த வைத்தியத் தோழன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார்.

    " உனக்கு தெரிஞ்சுக்க வேணும்னா இதோ.... எல்லாத்தையும் கேட்டுக்கோ. ரொம்பக் காலம் கடந்தாப் பிறகுதான் எமக்கு வேலை கிடைச்சுது. அதுவும் ரொம்பத் தூரப் பிரதேசம் ஒண்ணுல..கட்டடம் ஒண்ணு கூட இல்லாத பிரதேசம்.. கொஞ்ச நாள் போனாப் பிறகு எனக்குச் சொந்தமா ஒரு டிஸ்பென்ஸரியைத் தொடங்கினேன். இதற்கிடையில எனது நண்பனொருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கைவிட்டிருந்தான். அவளைத் திருமணம் முடிக்க விருப்பமில்லை எனச் சொன்னான். அவன், அப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தான். நான் பயந்து பயந்து அம் மோசமான செயலைச் செய்தேன். அதன் பிறகு அவன், அவனைப் போன்ற அவனது நண்பனொருவனையும் என்னிடம் அனுப்பியிருந்தான். இப்படி இப்படித்தான் நான் அபார்ஷன் டொக்டர் ஆனேன். இந்த இரண்டு கரங்களினாலும் நான் இதுவரை 32 உயிர்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறேன்."

வைத்தியத் தோழன், எம்மை அவரது சத்திரசிகிச்சையறைக்கு அழைத்துச் சென்றார்.

        "இதோ பாரு."

    அவர், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து எமக்குக் காட்டினார். விதவிதமான மதுபான போத்தல்கள் அங்கு நிறைந்திருந்தன.
   
    "நான் பெரியதொரு குற்றவாளின்னு எனக்குத் தெரியும். ஆனா கைவிடப்பட்டு வர்ற பெண்களுக்கு நான் ஒரு தெய்வம். எனக்கு இப்ப இது போதுமாகியிருக்கு. ஆனா என்னால இதை நிறுத்த முடியாது. நிறுத்துற அன்னிக்கு நான் மாட்டிக்குவேன். எல்லா வேலைக்கும் முன்னாடி நான் நல்லாக் குடிச்சுக்குவேன். வேலை முடிஞ்ச பின்னாடியும் நல்லாக் குடிப்பேன். 'செத்தாக் கூடப் பரவாயில்ல..செய்'ன்னு இதோ இவள் சொன்னாள். செத்துடுவாள்னுதான் நான் நெனச்சேன். ஆனா அதிர்ஷ்டசாலி.. ஆறு மாசக் கருவை அப்புறப்படுத்தியும் கூட இவள் ஆரோக்கியமா இருக்கா..அந்த ஆறு மாசக் கருவப் பார்த்தப்ப எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணிச்சுடா."

    வைத்தியத் தோழன் கதறியழத் தொடங்கினார். நிறைய நேரம் மேசையின் மீது தலையை மோதியபடி விக்கி விக்கியழுத வைத்தியத் தோழன் இன்னும் நிறையக் கதைகளைச் சொன்னார். எனினும் நிறைய நேரம் கடந்திருந்ததால் அவரிடமிருந்து விடைபெற்று நாம் வெளியேறினோம். நானும், நண்பனும் மீண்டும் அறைக்குத் திரும்பும் வழியில் ஒரு வார்த்தை கூடக் கதைத்துக் கொள்ளவில்லை. இரவில் எங்களைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் ஒளிக் கீற்றுக்கள் ஹெல்மட்டின் கண்ணாடியினூடு, இன்னும் பிறவாத குழந்தைக் கருக்களின் உருவமாகத் தோன்றி மறைந்தன.

- தேஷான் ருவன்வெல்ல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# இனியொரு
# வல்லினம் - செப்டம்பர், 2011
# உயிர்மை
# திண்ணை

Saturday, October 8, 2011

கட்டுநாயக்க தாக்குதல் - இரு மாதங்களின் பின்னர்...


            'தம்பி இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார். அவரால் கட்டிலிலிருந்து எழ முடியாதுள்ளது. இருக்கும் காணியை அடகுவைத்துத்தான் தம்பிக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். அப்பாவும் தம்பியைக் கவனித்துக் கொள்ளவென கட்டுநாயக்கவுக்கு வந்து அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். எனது கணவர், கொத்தனார் வேலை செய்து உழைக்கும் நாட்கூலியில்தான் எல்லாவற்றுக்கும்  செலவு செய்ய வேண்டியிருக்கிறது.'

            கட்டுநாயக்க தாக்குதலின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மங்கள சம்பத் எனப்படுபவரது சகோதரியான சம்பிகா என்பவர்தான் மேற்கண்டவாறு எம்மிடம் தொலைபேசியில் கூறினார். சம்பிகா தெரிவித்த தகவல்களுக்கு அமைய நாம் அடுத்து வந்த தினங்களிலொன்றில் தேசிய வைத்தியசாலைக்குச் சென்றோம்.

            மங்கள சம்பத், தேசிய வைத்தியசாலையின் 27 ஆவது வாட்டின் கட்டிலொன்றின் மீது மிகவும் துயரத்தோடு தனது வாழ்நாளைக் கழித்து வருகிறார். அவருக்கு இப்போதுதான் பத்தொன்பது வயது நடக்கிறது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர்தான் கட்டுநாயக்கவுக்கு வேலைக்காக வந்திருக்கிறார்.  உயர்கல்வியைப் பூர்த்தி செய்ய முன்பே குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு வந்திருக்கிறார்.

            ஊழியர் சேமலாப நிதியை முன்வைத்து 'தனியார் பிரிவு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்' எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்தின் போலியானதும் வஞ்சகமானதுமான செயற்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலைத்தள மட்டத்தில் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் பாரிய அளவில் எழுந்து நின்றது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும் இந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தான் பாடுபட்டு உழைத்துச் சேமித்த சேமலாப நிதியைப் பாதுகாத்துக் கொள்ளவென மங்கள சம்பத்தும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களின் பக்கமே வெற்றியீட்டிய போதிலும் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கோ, அதனால் மகிழ்வதற்கோ அவரால் முடியவில்லை.

            இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் மங்கள சம்பத்தின் இடுப்புப் பகுதி முற்றாக சேதமுற்றது. அவர் மயங்கி விழுந்தது வரையில் அவரது நினைவில் உள்ளது. இத் தாக்குதலின் போது அவரது அந்தரங்க உறுப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. அப் பாகங்களை மீண்டும் ஒருபோதும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியாதுள்ளது. உடலுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களின் மூலமாகவே அவரது கழிவகற்றல் நடைபெறுகிறது.

            'அன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிக் குண்டு பட்டு வீழ்ந்ததன் பிற்பாடு என்னை நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்துதான் தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். சத்திரசிகிச்சையின் போது எனது அந்தரங்க உறுப்புக்களை அகற்றியிருக்கிறார்கள். கழிவகற்றுவதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இன்னுமொரு சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டுமென வைத்தியர்கள் சொல்கிறார்கள்.'

            கிட்டத்தட்ட இரண்டு மாத காலங்கள் கட்டிலின் மீது பலவீனமான நிலையில் கிடக்கும் மங்கள சம்பத், அது குறித்து நம்மிடம் துயர் தோய்ந்த குரலில் மேற்கண்டவாறு சொல்கிறார்.

            தம்மிக அத்தநாயக, கட்டுநாயக்க துப்பாக்கிக் குண்டு தாக்குதலில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இன்னுமொரு இளைஞர். முப்பது வயதினைக் கடக்கும் அவர் ஏழு வருடங்களுக்கு முன்னர் இங்கு வேலைக்காக வந்துள்ளார். தனது உடல்நிலைமை குறித்து தம்மிக இவ்வாறு கூறுகிறார்.

            'இலங்கை வங்கியின் அருகில் வைத்து எனக்கு குண்டடி பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பொலிஸார் முன்னால் வந்தனர். குண்டு பட்டதும் நான் கீழே விழுந்தேன். அங்கிருந்த முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி என்னை வைத்தியசாலைக்கு எடுத்து வந்திருந்தனர்இன்னுமொரு சத்திரசிகிச்சை எனக்கு மேற்கொள்ளப்பட வேண்டுமென வைத்தியர்கள் கூறுகின்றனர். எனது சம்பளத்தில் தான் அப்பா, அம்மாவைக் கவனித்துக் கொண்டேன். எனக்கு குண்டடி பட்ட பிறகு அவர்களிருவரையும் கவனித்துக் கொள்ள வழியில்லை. தற்போது நான் மிகவும் கையாலாகாத நிலையில் உள்ளேன். திரும்பவும் என்னால் வேலை செய்ய முடியுமென நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.'

            தம்மிகவையும் சம்பத்தையும் போல கட்டுநாயக்க தாக்குதலின் காரணமாக கையாலாகாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள அனேகம்பேர் இருக்கின்றனர். அவர்கள் தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். தமது வறுமையின் காரணமாகவே இளைஞர் யுவதிகள் வர்த்தக வலயங்களின் தையற் தொழில்களுக்கு வருகின்றனர். இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுமிடத்து அவர்கள் சொல்ல முடியாத அளவிலான உதவியற்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இன்று இந் நிலைமை இவர்களுக்கு உரித்துடையதாக இருக்கிறது.

            ராஜபக்ஷ அரசாங்கமானது, இன்று அவர்களை மறந்து போயிருப்பதன் காரணம், அவர்களைப் பழி வாங்குவதற்காகவேயாகும். இவர்கள் இந் நிலைமையில் உள்ள போதும், அரசாங்கம் சும்மா இருப்பதில்லை. உளவாளிகளைக் கொண்டு தகவல்களைத் திரட்டுகிறது. ஊழியர்களை அச்சுருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களது வீடுகளுக்குச் செல்கின்றனர். அங்கிருக்கும் மூத்தவர்களை அச்சுருத்துகின்றனர். தொழிற்சங்கங்களோடு இணைந்தால் சுட்டுக் கொல்வோமென மிரட்டுகின்றனர். ராஜபக்ஷ அரசாங்கமானது முதலீட்டு சபையினூடு ஊழியர்களைப் பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. முதலீட்டு சபையின் ஆலோசனைக்கமைய ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு எந்தவொரு தொழில் நடவடிக்கைகளுக்கும் இடந்தராத விதத்தில் நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவித்தலும் வழங்கப்பட்டிருக்கிறது.

            கட்டுநாயக்க தாக்குதலானது, அரசாங்கம் திட்டமிட்டுச் செய்த ஒன்றாகும். எனினும் அத் தாக்குதலின் காரணமாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை காவல்துறையின் முதுகில் ஏற்றிவிட்டு சமப்படுத்தப் பார்க்கிறது.

            எல்லா அழுக்குகளையும் காவல்துறை மீது சுமத்திவிட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாக்குதலில் செத்துப் போன மற்றும் காயமடைந்த ஊழியர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கப் போவதாகச் சொன்னார். தேவையேற்படின் காயமடைந்தவர்களை வெளிநாடுகளுக்காவது அழைத்துச் சென்று குணப்படுத்தப் போவதாகச் சொன்னார். எனினும் அந்தக் கதைகள், அப்பொழுது ஆவேசமடைந்திருந்த நாட்டின் பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டவையாகும்

           எவரது உதவியும் அற்ற நிலையில் வைத்தியசாலைக் கட்டில்களில் துயரத்தோடு காலம் கடத்திவரும் ஊழியர்களைக் குறித்து தேடிப் பார்க்க எவருமில்லை. வாழ்க்கையொன்றின் மதிப்பை பணத்தால் ஈடு செய்ய முடியாத போதிலும், நிரந்தரமான அங்கவீன நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந் நோயாளிகளுக்கு நீதமானதொரு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அப் பொறுப்பை ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது சுமத்துவது, இவ் வாழ்க்கைகளை கையாலாகாத நிலைமைக்குத் தள்ளியது அவர்கள் என்பதனாலேயாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தரவுக்கமையவே காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. அதை மறைக்க, ஓய்வு பெற்றுச் செல்லவிருந்த காவல்துறை தலைமையதிகாரியை வெளிநாட்டுத் தூதுவராக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பியதில் ஒரு பயனும் இல்லை.

- ஜனக விஜேகுணதிலக
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனிமொரு
# உயிர்மை
# திண்ணை

Wednesday, September 28, 2011

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

    திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி  இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார்.

    இது 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அன்று அவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டனர். நீதியை நிலைநாட்டுவதற்காக எனக் கூறப்படும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்களை தூக்கிலிடத் தேவையான குற்றச்சாட்டுக்களை வரிசைப்படுத்துவது தொடங்கியது. எதுவுமே அறியாத திருமகளின் மகளும் தாயின் மார்பிலேயே பாலருந்தியவாறு சிறைச்சாலைக்குள்ளேயே உறங்கியது.

    அன்று அவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கைச் சரிதம் இன்று எந்த நிலையில் உள்ளது?

    எனக்கு திருமகளை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் வைத்து சந்திக்க நேர்ந்தது. சற்றுக் குள்ளமாக, நிறைந்த முகத்துடனிருந்த அவர் கைது செய்யப்பட்ட தினத்தைச் சொன்ன போது நான் அதிர்ந்து போன விதம் குறித்து அவர் பிறகொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டினார்.

    பதினைந்து வருடங்களென்பது ஒருபோதும் சிறியதொரு காலமல்ல. இதிலுள்ள பாரதூரமான அநீதி அதுவல்ல. இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் சந்தேகநபர்களாக மட்டுமே இருந்தமை. சந்தேக நபர்கள் மாத்திரமே என்றாலும் அவர்கள் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிலவேளை அது தவறுக்காகக் கொடுக்கப்படும் தண்டனையை விடவும் அதிகமானதாக இருக்கக் கூடும். அது மட்டுமல்லாது இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் 429 தடவைகள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

    அவ்வாறாயின் 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. 15 வருடங்கள். அவ்வளவு முயற்சித்தும் முடியாதென்றால் அவர்களது சந்தேக நபர்கள் என்ற நிலையில் சந்தேகம் தோன்றாதா என்ன?

    கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது வழக்காடு மன்றத்தில் விசாரணை செய்யப்படும் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் ஐவர். சரவணமுத்து லோகநாதன், சின்னப்பு செல்வராஜ், சுப்பையா ஸ்ரீதரன், ரொபர்ட் மெக்ஸலன் மற்றும் திருமகள் ஆகியோரே அவர்கள். இங்கு குற்றச் சாட்டுக்களை சுமத்துபவர்களாகத் திகழ்வது சட்டமா அதிபர் திணைக்களம். நாங்கள் அவர்களிடம் எழுப்பும் கேள்வி இதுதான். இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இன்னும் எத்தனை தடவை அவர்கள் தங்களுக்கான தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் இருக்க வேண்டும்? கைதிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்? 15 வருடங்களாக முடியாமல் போனது இன்னும் ஐந்து வருடங்களானாலும் முடியுமா? பத்து வருடங்களில் முடியுமா? 429 தடவைகள் முடியாமல் போனது இன்னும் 429 தடவைகளிலேனும் முடியுமா? இதன் முடிவு என்ன?

    திருமகள்கள் மட்டுமல்லாது , இதே போன்ற நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் சிறைக் கைதிகள் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்பதை நாங்கள் அறிய மாட்டோம். அவர்கள் குண்டுகளைக் கொண்டு சென்றவர்களா, ஒத்துப் பார்த்தவர்களா இல்லையா என்பதுவும் எமக்குத் தெரியாது. எனினும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதென்றால் குறைந்தபட்சம் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட வேண்டும். எனினும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் நடைபெற்றிருக்கிறது.

    அது ஒரு விடயம். இன்னொரு விடயமானது அவர்கள் அன்று உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டிய காரணி எது என்பது. போரிடக் கூடிய, ஆயுதந் தாங்கிய குழுவொன்று உருவாவதென்பது ஓரிருவரது பிடிவாதம் குறித்த பிரச்சினையல்ல. அது அரசியல் பிரச்சினை. அப் பிரச்சினைக்கான தீர்வைத் தேட வேண்டியதுவும் அரசியல் ஊடாகத்தானே தவிர வேறு வழியிலல்ல. உலகில் எங்கும் இளைஞர்கள் அநீதிக்கு எதிராக எழுந்திருக்கிறார்கள். இலங்கையிலும் அவ்வாறுதான். ஒரு முறை தெற்கின் மூலையிலும் இன்னொரு முறை வடக்கின் மூலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.

    அவ்வாறு இளைஞர்களை போராட்டத்துக்கு அழைப்பது இந்த அநீதமான ஆட்சி முறைதான். கொள்ளையடிப்பதை சட்டபூர்வமானதாக ஆக்கி, அநீதியை மதமாக்கியிருக்கும் சமூக வழிமுறை. எங்கள் தேசத்தில் தொழிலாளிகள், விவசாயிகள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகம் இப்பொழுது இப் பிரச்சினை குறித்து மிகவும் விரிந்த அரசியல் பார்வையோடு பார்த்தல் வேண்டும். அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் புலிகள் என பொதுவாக நோக்குவதை மாற்றுதல் வேண்டும்.

    இது பாரதூரமானதொரு உரையாடல். விரிவாகவும், நீண்டதாகவும் உரையாடப்பட வேண்டியதொரு தலையங்கம்.  தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியாக இருக்கும்படி அரசாங்கம் எங்களை இன்னும் வற்புருத்துகிறது. தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டியது கட்டாயம். எனினும் உண்மையாகவே அதனைச் செய்ய முடியுமாவது தீவிரவாதத்துக்குக் காரணமான வேர்களை அழிப்பதன் மூலமாக மட்டுமே. வேர்களினுள் அடங்கியிருப்பவை அநீதிகள், தேசியத் துயரங்கள், வறுமை போன்ற சிக்கல்கள். அவற்றை முழுமையாக அகற்றாமல் இளைஞர்கள் எழுந்து நிற்பதைத் தடுக்க முடியாது. சமூகத்தில் முக்கியமானவர்கள் என எமது தோள்கள் மீது பொறுப்பு சுமத்தப்படுவது இவ்விடத்தில்தான்.

    இப்பொழுது திருமகள்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாங்கள் அச்சமேதுமற்று உரைப்போம். அது பாரதூரமான, விவாதத்துக்குரிய விடயமொன்று என்பதையும் அறிவோம். சமூகத்தில் அனேக பொது மக்கள் இன்னும் இவ் எண்ணத்துக்கு இணங்க மாட்டார்கள் என்பதையும் அறிவோம். எனினும் சமூகத்தின் நகர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவ்வாறான முன்னடைவுக்கும் போராட்டத்துக்குமான அனுமதியைத் தவிர்த்து முன்னே செல்ல முடியாது. ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இன்று மக்களை வசீகரிப்பதற்கு, தாக்குவதற்கான பொது எதிரி எவருமில்லை. பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகையில் முன்வைப்பதற்கான காரணங்கள் இல்லை. அதன் காரணத்தால் மாண்டு போன பின்னரும் அரசாங்கம் இன்னும் பிரபாகரனைத் தேடுகிறது. இதனால், கடந்த போராட்டத்தை மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்துச் சுவைக்கிறது. நீர் விளையாட்டுக்கள், வருடப் பூர்த்தி விழாக்கள், இலங்கை யுத்தத்தின் ஞாபகங்கள் குறித்த வலைத்தளங்கள் என நாடகங்கள் நீள்வது இதனால்தான்.

    அரசாங்கம் இவ்வாறு காய் நகர்த்துவது தமிழர்களின் வாழ்வோடுதான். அவர்களை இன்னுமின்னும் துயரத்துக்குள்ளாக்கும் தீவிரவாதத்தைத் தடுக்கும் சட்டங்கள், உடனடிச் சட்டங்கள் போன்ற தடுப்புச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும், இன்னுமின்னும் அவர்களது பிள்ளைகளை சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைப்பதன் மூலமும் தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது எண்ணங்களுக்குள் நுழைவிப்பதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் இன்னுமின்னும் பரப்புவதன் மூலம் அரசாங்கம் தனது பலத்தைக் காத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

    நாம் அச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேவைப்படுவது தேசிய ஒற்றுமையே. ஒற்றுமை வசனங்களால் உருவாகாது. அதற்கு அரசியல் ரீதியான வேலைத் திட்டமொன்று தேவைப்படுகிறது. பாரபட்சம் எண்ணங்களால் அழியாது. அதற்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகிறது.

    சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசிய ஒற்றுமைக்காக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்துக்கு முன் நிற்போம்.

- உதுல் பிரேமரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# இனியொரு
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
# திண்ணை

Thursday, September 15, 2011

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்


            இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது.

            விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான தலையீடும் இருக்கவில்லை. தமிழ்நாட்டுச் சக்திகளே இந்தியாவை ஆண்டன என்றும்,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருந்த அரசியல் ரீதியான உறவு முறைகள் யுத்தகாலத்திலும் கூட சிறந்த முறையில் பேணப்பட்டதென்றும் கூட சொல்லலாம்.

            விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த போதிலும் கூட, யுத்தத்தின் பின்னர் உருவாகக் கூடியதும், முகம்கொடுக்கவும் வேண்டி வரும் சிக்கல்களுக்கு, யுத்தத்தின் போது காட்டிய அதே தீவிரத்தோடு தீர்வு காண இலங்கையால் முடியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவிய வெளிநாட்டு சக்திகளை முழுவதுமாக மிச்சம் வைத்துவிட்டுத்தான் இலங்கையானது, விடுதலைப் புலிகளை போரில் வென்றிருக்கிறது. எனவே எஞ்சியுள்ள அச் சக்திகளின் ஆயுத வியாபாரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த யுத்த முடிவானது, அச் சக்திகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவும், இலங்கையைப் பலிவாங்கவென தமது பலத்தை மிக அழுத்தமாகப் பயன்படுத்தும் நிலைக்கு அவைகளைத் தள்ளவும் போதுமானது. சர்வதேச மட்டத்தில் இப்பொழுதும் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கென பாரிய அளவிலான சக்தியும், வரவேற்பும் இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளை அனுதாபத்தோடு பார்க்கும் மக்களும் சர்வதேச அளவில் இருக்கின்றனர்.

            எனினும் யுத்தம் முடிவடைந்ததன் பிறகு, யுத்தத்தினால் இன்னல்களுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையை மீளவும் சிறந்த முறையில் கொண்டு செல்லவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அனைவரும் மதிக்கக் கூடியதும், அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டக் கூடியதுமான நல்லதொரு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் என இலங்கை அரசாங்கமானது சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்குமேயானால், தற்போதைய சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படாமல் இருந்திருக்கக் கூடும். இன்னல்களுக்குள்ளாகிய மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பவும் பழைய நிலைமைக்குக் கொண்டு செல்லவென அரசாங்கமானது, தற்போது அனேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உண்மைதான். என்றபோதிலும் அந் நடவடிக்கைகள் அப் பிரதேசங்களில் வாழும் துயருறும் மக்களை மேலும் மேலும் துயரத்துக்குள்ளாகுபவையாகவே அமைந்துள்ளன எனில் அந் நடவடிக்கைகளினால் என்ன பயன் இருக்கப் போகிறது?

            தமிழ் பிரதேசங்களில், நகர சபைத் தேர்தலை நடத்தியது அரசின் மிகவும் நல்லதொரு நடவடிக்கை எனச் சொல்லலாம். எனினும் அதனை யுத்தத்துக்குப் பிறகான நகர சபைத் தேர்தல் எனக் கருதி, அரசாங்கமானது தனது ஆளுமையை அதிக அளவில் அத் தமிழ் மக்களிடம் செலுத்தாதிருந்திருக்கலாம். அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு, அவர்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முழுமையாக வழங்கியிருந்தால், அத் தேர்தலில் யார் வென்றிருந்தாலும், தேர்தல் நேர்மை குறித்த கௌரவமானது  இறுதியில் அரசாங்கத்துக்கே கிடைத்திருக்கும்.

            எனினும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த தலையீடுகளின் காரணமாக, தமிழ் மக்களால் அரசாங்கமானது தோற்கடிக்கப்பட்டமையே தற்பொழுது நடந்திருக்கிறது. அதாவது அரசாங்கமானது தான் தோற்கும் வாய்ப்புக்களை, தனது அதிகபட்ச தலையீடுகளின் காரணமாக தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாகப் பார்க்கையில், வடக்கில் நடைபெற்ற தேர்தலில், கள்ள வாக்குப் பிரச்சினைகள் ஏற்படாத போதிலும், அத் தேர்தலின் மீதான ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்ட பல சம்பவங்கள் அங்கு நடந்தேறியிருக்கின்றன என்பதே நிதர்சனம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வை வழங்கும் வரையிலாவது, இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற இடம்கொடுக்காமல், சுதந்திரமாகவும், தங்கள் பாட்டில் வாழவும் அம் மக்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

            உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான தாக்குதலானது, மீண்டும் வடக்கின் நிலைமைகள் குறித்த மோசமான சித்திரத்தையே வரைந்து சென்றிருக்கிறது. அத் தாக்குதலை யார் மேற்கொண்டிருப்பினும், அத் தாக்குதலுக்கான கெட்ட பெயரானது அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும். வடக்கில் ஆயுதந் தாங்கியிருக்கும் அனைத்து அரசியல் குழுக்களையும் நிராயுதபாணிகளாக்குவதுவும் இராணுவப் படைகளை அங்கிருந்து அகற்றி, காவல்துறையின் கடமைகளை காவல்துறைக்கே செய்யவிடுவதுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதைத் தடுக்க, எடுக்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.

            இன்னும், வடக்கில் நகர மற்றும் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கு, சுதந்திரமாக அவர்களது கடமைகளை மேற்கொள்ளும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுவும் அரசின் கடமையாகும். அப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகளை கட்சி பேதமற்று வழங்குவதுவும், அங்கு நடைபெறும் பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக் கொள்வதுவும், அவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதுவும் என அரசாங்கமானது தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி, தமிழ் மக்களை மேலதிக இன்னல்களிலிருந்து பாதுகாக்குமேயானால், அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களும் குறையக் கூடும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# இனியொரு
# உயிர்மை
# திண்ணை