Friday, November 2, 2012

2012 ஆம் வருடத்துக்கான 'வியர்வையின் ஓவியம்'' விருது

அன்பின் நண்பர்களுக்கு,
இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா 01.11.2012 நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும்,  பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.


மகிழ்வான இத் தருணத்தில் எனது இலக்கியப் பயணத்தில் எப்பொழுதும் கூடவே பயணிக்கும் உங்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
02.11.2012

Friday, October 5, 2012

சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

அன்பின் நண்பர்களுக்கு,

இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' நாவலுக்கு '2011 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்' கிடைக்கப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.



இக் கணத்தில் இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுனேத்ரா ராஜகருணாநாயக்க, மொழிபெயர்ப்பில் உதவிய சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹான், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம், நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்த எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் இந் நாவல் வெளிவர பாடுபட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Sunday, January 8, 2012

எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று !

    2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி, என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு, ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று ,  இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது. 

    எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியுள்ள இந் நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
    அழைப்பிதழ்  இங்கே – http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html , http://mrishaanshareef.blogspot.com/2012/01/invitation-to-my-book-launch-in-india.html

    அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி
# எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
# விடிவெள்ளி வார இதழ்
# வீரகேசரி வாரவெளியீடு
# ஊடறு இணைய இதழ்
# பதிவுகள் இணைய இதழ்
# பெண்ணியம் இணைய இதழ்
# திண்ணை இணைய இதழ்

Sunday, January 1, 2012

எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்!

2012 ஆம் ஆண்டு இனிதே மலர்ந்திருக்கிறது. நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு மலரப் போகும் தருணத்தில் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த பரிசு மிகுந்த ஆனந்தத்தைத் தந்திருக்கிறது. சென்ற வருடம் அதிக வேலைப் பளுவின் காரணமாக எனது சிறுகதைகளுக்கான வலைத் தளத்தில் மூன்று சிறுகதைகளை மாத்திரமே பதிவிட முடிந்தது. எழுத்தாளர் மாதவராஜ் அறிவித்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற வம்சி சிறுகதைப் போட்டி 2011 க்கு அவற்றையே கொடுத்திருந்தேன். போட்டிக்கு மொத்தமாக 373 சிறுகதைகள் வந்திருந்ததைக் கண்டேன். எனவே நிச்சயமாக பரிசை எதிர்பார்த்திருக்கவேயில்லை.

நேற்று வந்திருந்த மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் வாழ்த்துக்களின் மூலமே சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட வம்சி சிறுகதைப் போட்டியின் முதல் பரிசு எனது 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்குக் கிடைத்திருக்கிறதென்பதை முதலில் அறிந்துகொண்டேன். இப் பரிசு பெரும் ஊக்கத்தைத் தந்திருப்பதோடு கூடவே நல்ல படைப்புக்களை மாத்திரமே தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனும் பெரும் பொறுப்பையும் இனிய சுமையாய் என் மீது சுமத்தியிருக்கிறது.

இக் கணத்தில் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திய எழுத்தாளர் மாதவராஜ், வம்சி பதிப்பகம் மற்றும் நடுவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய பரிசுகளைப் பெற்ற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இச் சிறுகதையும், ஏனைய பரிசுகளைப் பெற்ற 17 சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வரவிருப்பதாகவும், பரிசு பெற்ற எனது சிறுகதைத் தலைப்பான 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' எனும் தலைப்பே தொகுப்புக்கு வைக்கப்படவிருப்பதாகவும்,எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  இத் தொகுப்பை வெளியிட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் வம்சி பதிப்பகம் அறிவித்திருக்கிறது.

அத்தோடு, எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று, சரியாக மாலை 5.45 மணிக்கு, எனது மொழிபெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' எனும் நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.

2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் வென்ற பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயகவின் நாவலையே நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இலங்கையின் கலவர காலமொன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையிது.

 இந் நாவலுக்கு எனது அபிமானத்துக்குரிய எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவன்று இந் நாவலை எனது மதிப்புக்குரிய எழுத்தாளர்களான திரு.அசோகமித்திரன் வெளியிட, திரு.தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக, முன்னுரை வழங்கிய எழுத்தாளர் அம்பை, தொகுப்பாக வெளிக்கொண்டு வரும் காலச்சுவடு பதிப்பகம், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் மொழிபெயர்ப்பில் உதவிய எனது சகோதரி கவிஞர் ஃபஹீமாஜஹான் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை இக் கணத்தில் பதிவு செய்கிறேன்.

அத்தோடு எனக்கு வாழ்த்துக்களைச் சொன்ன மற்றும் நான் எழுதுவதற்கான ஊக்கத்தை தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இப் பதிவையே அழைப்பிதழாகக் கொண்டு, இந் நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
01.01.2012