Wednesday, December 4, 2013

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு



            அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்...இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம்.

            வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன.  அம் மக்களின் முகங்களில் நிச்சயமற்ற தன்மையின் சாயல் படிந்திருந்தது. இடைக்கிடையே, உடைந்துபோன மதில்களில் சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் நெருங்கி வரும் தேர்தலை எமக்கு ஞாபகமூட்டுகின்றன. அவை அநேகமாக ஆளும்கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளே.

            கிளிநொச்சியானது நீண்டகாலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பிரதேசமாகும். இப்பொழுது நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலானது, இங்குள்ள சிலர் 30 வருட காலத்துக்குப் பின்னர் முகம் கொடுக்கப் போகும் முதல் தேர்தலாகும். எனினும் அவர்கள் அதனை மிகப் பெறுமதியான ஒன்றாகக் கருதுவதில்லை. தேர்தல் எனப்படுவது, ஜனநாயக ஆட்சி முறையின் முதல் இலட்சணமாகும். எனினும் எமது பயண இலக்குகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் இன்னும் சிவில் ஆட்சி முறையிலிருந்து தூரப்படுத்தப்பட்ட, இராணுவ ஆட்சியின் கீழ், துயருறும் வாழ்க்கையை நடத்திச் செல்லும், கடந்த கால குரூர யுத்தத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்தும்படியாக இருண்டுபோன பிரதேசங்களாகும்.

          குரூர யுத்தத்தின் சிதிலங்கள்

            ஒரே தேசத்தில், ஒரே நிலத்தின் ஒரு பகுதியைப் பங்கிட்டுக் கொள்ள நடைபெற்ற யுத்தத்தின் இருண்ட நினைவுக் குறிப்புக்கள், இம் மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாகவே பரவி விசிறப்பட்டிருக்கின்றன. அநேகமானவர்களுக்கு தாம் பிறந்த கிராமத்தில் ஆரம்பித்து, புதுமாத்தளன் யுத்த களத்தில் உயிர் தப்பி, இராணுவ வலயத்தின் இடம்பெயர் முகாம்களில் சிக்குண்டு, சிறைப்பட்டு திரும்பவும் தமது கிராமங்களுக்கு மீளத் திரும்பிய இருண்ட வரலாறுகள் உண்டு.

            அந்த இருண்ட ஞாபகங்கள் அன்று அவர்கள் ஷெல் மழைகளிலிருந்தும், மோட்டார் குண்டுகளிலிருந்தும் தப்பித்து, வாழ்க்கையோடு போராடி, வாழ்வதற்காக வேண்டி இத் துயருற்ற நிலத்தில் நடந்து சென்ற தூரத்தினாலும், கடந்த காலத்தில் அனுபவித்த வேதனைகளாலும் நிரம்பியவை. அந்த இருண்ட ஞாபகங்கள் அவர்களை இன்றும் வதைக்கின்றன. சில நேரங்களில் அழ வைக்கின்றன.

          பிள்ளை வரும்வரை...

        தமது பிள்ளைகள் வரும்வரை வழிபார்த்திருக்கும் தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும், தமது சகோதர சகோதரிகள் வரும்வரை வழிபார்த்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இந் நிலத்தில் பஞ்சமேயில்லை. யுத்தம் முடிவுற்று நீண்ட காலம் ஆன பின்பும் கூட இன்னும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் புதிதாகவே உள்ளன. அநேகமானவர்களது ஒரே எதிர்பார்ப்பு, தமது மரணத்திற்கு முன்பாக காணாமல்போன தமது மகனை, மகளைக் காண்பதாகும்.

            மேரி புஷ்பராணி அம்மாவுக்கும் கூட தனது வாழ்க்கையில் ஒரேயொரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது, யுத்த களத்திலிருந்து இடம்பெயர்முகாமுக்குள் வந்த பிற்பாடு காணாமல் போன தனது மகனை (ஆண்டனி ஜெயசுந்தரம் நளினிகாந்தன்), தனது மரணத்துக்கு முன்பதாகக் காண்பதாகும்.

            "எனது மகன் ஆண்டனி 1987.02.19 அன்று பிறந்தவர். நாங்கள் யுத்த களத்திலிருந்து வந்து இராணுவத்தைச் சரணடைந்தோம். 2009.05.10 ஆம் திகதி, செட்டிக்குளம், ஆனந்த குமார ஸ்வாமி முகாமில் வைத்துத்தான் அவர் காணாமல் போனார். அப்பொழுது அவருக்கு வயது பத்தொன்பதுதான் ஐயா. அவருக்கு இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவரை எங்காவது சிறைப்படுத்தி வைத்திருப்பார்களென எனக்குத் தோன்றுகிறது. நான் போகாத இடமில்லை. வெலிக்கடை, களுத்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு என எல்லா இடங்களுக்கும் போனேன். இன்னும் எனது பிள்ளையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு எனது மகனைத் தேடித் தாருங்கள் ஐயா. என்னால் அப்பொழுதுதான் நிம்மதியாகக் கண்களை மூட முடியும்."

            அழுகை கலந்த தொனியோடு அவர் சொல்லிக் கொண்டே போகிறார். அவரைத் தொடர்ந்து இன்னுமொரு பெண் வந்து அவரது துயரத்தையும் எம்மிடம் கூறினார். அவரது பெயர் ராசா மேரி லெட்ரீஷியா. அவரது கவலை, காணாமல் போன தனது மகளைப் பற்றியது.

            "எனது மகள் ராசா மேரி தர்ஷியா. காணாமல் போகும்போது அவளுக்கு வயது 18. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவளை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து கைவேலியில் வைத்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். பிறகு வட்டுவாலிலுள்ள இராணுவ எல்லைக்குள் அவள் வந்ததாக நிறையப் பேர் கூறினார்கள். அவர்கள் தர்ஷியாவை அங்கே கண்டிருக்கிறார்கள். எனது மகள் தென்பகுதியில் எங்காவது இருப்பாளென எனக்குத் தோன்றுகிறது."

            அவரும் தனது மகளைத் தேடுகின்றார். இந்தப் பிரச்சினையானது, இலங்கை அரசால் தவிர்த்து விட  முடியாதளவிற்கு சர்வதேச மட்டத்திலுள்ள பிரச்சினையாகும்.

          அங்கவீனர்கள்

            விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்துக்குள் மட்டும் கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பேர் அங்கவீனமாகியுள்ளனர். இப்போதிருக்கும் நிலையில் அவர்களது எதிர்காலமானது கேள்விக்குறி ஆகும். அவர்களது துயர வாழ்க்கை மற்றும் தற்போதுள்ள சமூக நிலைப்பாட்டுக்குள் அவர்களது வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்பது பற்றி கிளிநொச்சி மாவட்ட அங்கவீனர் சங்கத்தின் தலைவர் திருணாகரன் சிவராமன் இவ்வாறு கூறுகின்றார்.

            "நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் அங்கவீனர்களாகியிருக்கிறோம். இப் பன்னிரண்டாயிரம் பேரினதும் அங்க இழப்புக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டது. எமக்குத் தொழில் இல்லை. எமது நிலையைக் கருத்திற்கொண்டு தகுந்த வேலைகளில் அமர்த்துவது அரசின் கடமை. இல்லாவிடில் நாங்கள் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டுசெல்வது? இங்குள்ள வறிய மக்களுக்கு எம்மைப் பராமரிக்கும் அளவு வசதி கிடையாது. அவர்களுக்கும் தொழில் இல்லை. பணம் இல்லை. பொது இடங்கள் கட்டப்படும்போது எம்மைப் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் இன்றுவரை அது நடைமுறையிலில்லை. அங்கவீனர்களாகிய எமக்கு உதவிகளை வழங்கி, நல்லதொரு வாழ்க்கையை எட்டச் செய்வது அரசின் பொறுப்பாக உள்ளது. சமூகத்திற்கு ஒரு பாரமாக இருக்க அங்கவீனர்களாகிய நாம் விரும்புவதில்லை. ஏதாவது செய்து வாழ்க்கையைக் கொண்டு செல்ல எம்மால் முடியும். எமக்கு அரசிடமிருந்து அதற்கான உதவி தேவைப்படுகிறது."

            'மனிதாபிமான நடவடிக்கை'யின் காரணமாக அங்கவீனர்களாகிய இவ்வாறான மனிதர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக, திரும்பவும் உண்மையான மனிதாபிமான நடவடிக்கையைத் தொடங்குவது உடனடித் தேவையாகும்.

          போர்க் கால விதவைகள் மற்றும்
          இன்னும் சில பிரச்சினைகள்
    
        'யுத்தமொன்றின்போது முதன்முதலில் இடப் பெயர்வுக்குள்ளாகுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான்' என பிரபல சொல்லாடலொன்று உள்ளது. வடக்கிற்கும் அது பொதுவானது. முல்லைத்தீவுக்குள் மாத்திரம் போர்க் காலத்தில் விதவையான பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7500 ஆகும். கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இதைப் போல இரண்டு மடங்காக உள்ளதென சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

            போர்க்கால விதவை நிலைமையானது ஒரு சமூகத் துயரமாகும். இச் சமூகத் துயரத்தைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வளிப்பது அனைவரதும் கடமையாகும். அக் கடமை குறித்து முல்லைத் தீவு சமூக செயற்பாட்டாளரான பெருமாள் குமாரி எம்மிடம் இவ்வாறு தனது கருத்தினைத் தெரிவித்தார்.

            "எமது சமூகத்தில் விதவைப் பெண்கள் அநேகமானவர்கள் உள்ளனர். அவர்களது பொருளாதார நிலைமை பூச்சியமாகும். அவர்களது பொருளாதார நிலைமை கீழிறங்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? இதனால் இப்பொழுது எமது சமூகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதற்காக பேரூந்துகள் இங்கு தரித்து நிற்பதில்லை. அவர்கள் நடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. விடிகாலையில் பாடசாலை சென்று வீடு திரும்பும்போது மாலை 4 மணியாகிவிடும். இவ்வாறு நடந்துவரும்போது யாராவது தமதருகில் சைக்கிளை நிறுத்தினால் அவர்கள் அதில் ஏறி விடுகின்றனர். அதன்பிறகு வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். நாங்கள் இப்பொழுது பிரச்சினைகள் பலவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். எம்மால் தேர்தல் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை. அதற்கு நாங்கள் முயற்சிக்கவுமில்லை. எமக்கு அதை விடவும் பல பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் இன்று வாழ்ந்துவிட்டு, நாளை எப்படி வாழ்வது என்ற யோசனையிலேயே எப்பொழுதுமிருக்கிறோம்."

            இன்று இலங்கையின் தென்பகுதியில், வடக்கின் தேர்தலானது ஒரு பிரச்சினையாகும். தெற்கின் இனவாதத் தலைவர்கள் இத் தேர்தலை முன்னிட்டு 'தனி ஈழத்துக்குப் பாதை அமைக்கப் போகிறார்கள்' எனக் குரலெழுப்புவதைக் கேட்க முடிகிறது. அது உண்மையெனில், இம் மக்கள் தமது அரசுக்குப் பாதையமைக்கப் போகும் இத் தேர்தலுக்காக உயிரைக் கொடுத்துப்  பாடுபட வேண்டும் அல்லவா? எனினும் அவர்களுக்கு இதைவிடவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. அவர்களுக்குக் குடிக்க தூய குடிநீர் வசதி இல்லை. ஒழுங்கான பாதைகள் இல்லை. அதிகளவான பிரதேசங்களுக்கு இன்னும் மின்சார வசதி இல்லை. ஏ9 பாதையானது செப்பனிடப்பட்டிருந்த போதிலும், இடையிடையே குறுக்கிடும் தெருக்களும், ஏனைய பாதைகளும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் கிணறுகள் யாவும் தூர்ந்துபோயுள்ளன.

            இங்குள்ள மக்களில் அநேகமானவர்கள் விவசாயத்தையும், மீன்பிடிக் கைத்தொழிலையும் தமது ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். எனினும் இன்று தண்ணீர் வடிகால்கள் சிதிலமடைந்துள்ள காரணத்தால் விவசாயத்துக்கான தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் சோர்ந்துபோகும் நிலைக்கு இவர்கள்  தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை. உபகரணங்கள் இல்லாமல் கடலுக்குச் செல்ல முடியாது. அதனால் வடக்கில் இன்று சிறு பிள்ளைகள் உட்பட, பலரும்  பேக்கரி போன்ற நிலையங்களில் வேலை பார்த்து அன்றைய தினத்துக்கான உணவினைத் தேடிக் கொள்பவர்களாக உள்ளனர்.

            யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இங்குள்ள மக்களில் அநேகமானவர்கள் உயிராபத்துக்கு அஞ்சி பாதுகாப்பைத் தேடி ஓடியவர்கள். அவர்களது பிறப்புச் சான்றிதழிலிருந்து தமது காணி உரித்துச் சான்றிதழ் வரை அனைத்துப் பத்திரங்களையும் தொலைத்தவர்கள். அவற்றை மீண்டும் ஒழுங்கான முறையில் பெற்றுக் கொள்ள அரசானது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

            யுத்த காலத்தில் விட்டுவந்த தமது வாகனங்களும், பாரம்பரிய காணி நிலங்களும் தமக்கு இன்னும் கிடைக்கவில்லையெனவும், சிலரது இடங்களுக்குள் இராணுவ முகாம்கள், பௌத்த விகாரைகள் போன்றன கட்டப்படுவது வியப்புக்குரியது எனவும் தெரிவிக்கும் அவர்கள், இவற்றை மீளப் பெற்றுத் தந்து யுத்தத்தின் காரணமாக கையறு நிலைக்குள்ளாகியிருக்கும் தமக்கு அரசு உதவ வேண்டுமெனவும் கூறுகின்றனர்.

          இராணுவமும், இராணுவக் குடியிருப்புகளும்

            கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குள் பார்க்குமிடமெல்லாம் இராணுவ முகாம்கள், காவற் தடைகள், சந்தி சந்தியாக நின்றுகொண்டிருக்கும் இராணுவத்தினர் மற்றும்  சாதாரண உடையில் நடமாடும் ஒற்றர்கள். எனவே மனிதர்கள் வாயைத் திறக்கவும் பயந்துபோயுள்ளனர். சிவில் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சந்திப்பொன்றின் போது கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒரு விடயத்தை எமது கவனத்துக்குக் கொண்டு வந்தார்.


            "தெற்கின் ஊடகவியலாளர்களிடம் நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். நான் ஒரு நாள் தெருவில் வைத்து எனது தோழியுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு இராணுவ வீரர் எம்மிடம் வந்து என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார். எமக்கு இத் தெருவில் நின்று கதைக்கக் கூட உரிமை இல்லையா?"

            இது வடக்கின் ஜனநாயக நிலைப்பாடாகும். திருமணம் போன்ற உற்சவ நிகழ்வுகளைத் தமது வீட்டில் நடத்துவதாயின், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே அது பற்றியும், அந் நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பூரண விபரங்களையும் அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்குச் சென்று அறியத் தர வேண்டும். இது, இராணுவமானது இம் மக்களின் வாழ்விற்குள் ஊடுருவியுள்ள விதத்தைக் காட்டும் ஒரு உதாரணமாகும்.

          தேர்தல் போராட்டம்

            தெற்கில் தேர்தலானது ஒரு போராட்டமாகும். விடுதலைப் புலிகளின் ஆட்சியிலிருந்து மீண்டுள்ள வடக்கிற்குள் இன்னும் தேர்தல் வன்முறைகள்  ஊடுருவவில்லை.

            "நாங்கள் தேர்தலைக் கேட்கவில்லை ஐயா. நாம் கேட்பதெல்லாம் தண்ணீர், இருப்பிடம், பாதை, பள்ளிக் கூடம், வைத்தியசாலை, மின்சாரம் ஆகியவற்றைத்தான். ஆனால் இப்பொழுது தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை."

            இதை மட்டும்தான் பலரும் கூறுகின்றனர். சிலர் இத் தேர்தல் குறித்து எதையும் கதைப்பதாயில்லை.

            முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்மிடம், அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தனது தேர்தல் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதாகக் கூறினார். அவ்வாறே முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்தார். தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்டு, கிளிநொச்சியின் சுயாதீன வேட்பாளர் ஒருவர், இப்பொழுது தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறாவிட்டாலும் கூட, நவநீதம் பிள்ளை வந்து சென்றதன் பிற்பாடு, எதிர்வரும் காலத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறக் கூடுமெனத் தெரிவித்தார்.

            தேர்தல் குறித்து எவ்வித முனைப்புமே காட்டாத மக்களுக்கு மத்தியில் வடக்கின் தேர்தலை அத்தியாவசியமானதாகவும், வென்றே தீர வேண்டுமெனவும் கருதும் அரசுக்கும், தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெறப் போகும் இத் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையப் போகிறதெனக் கூற இயலாதுள்ளது.

            1997 இன் பிறகு இலங்கையின் தேர்தல் வரலாறு குறித்தும், வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவ முகாம்களின் அளவு குறித்தும் சிந்தித்துப் பார்க்கும் ஒருவருக்கு, இத் தேர்தலானது சுதந்திரமானதும், சாதாரணமானதும் ஒன்றாக இருக்கக் கூடும் என ஒருபோதும் எண்ண முடியாது.


- கே.சஞ்சீவ 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# இனியொரு
# பதிவுகள்
# திண்ணை

 


Friday, October 25, 2013

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !



குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது.  அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.


உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : குடும்பம் எனப்படுவது ஒரு ஆப்கானியனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அடையாளம் ஆகும். எவரும் தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவரையும் புரிந்து கொள்வதைப் போலவே உலகம் போன்ற அனைத்தினுள்ளும் தன்னை நிலைநிறுத்துவதும் குடும்பத்துக்கு இணையாகத்தான். இந் நாவலின் கதையை ஆப்கானிஸ்தானுக்கு வெளியே கொண்டு சென்றது நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அவ்வாறே இக் கதையின் யதார்த்தமான நடைக்கு அவ்வாறான சர்வதேசப் பரம்பல் அவசியமானது. காபூல் நகரத்தில் ஆரம்பித்து கந்தஹார் பிரதேசத்தில் முடியும் ஒரு கதையைக் கூற எனக்கு அவசியப்படவில்லை. கடந்த பத்து வருட காலத்துக்குள் நான் உலகின் பல இடங்களுக்கு பயணம் செய்து பெற்ற அனுபவங்களை, எனது கதையின் கதாபாத்திரங்களுக்குத் தேவையான பூகோளச் சுற்றாடலை உருவாக்குவதற்கு உபயோகப்படுத்த எனக்குத் தேவைப்பட்டது. அவ்வாறே ஒரு எழுத்தாளராக ஆப்கானிஸ்தானைத் தாண்டிய அனுபவங்களை எனது படைப்பில் சேர்த்துக் கொள்ள நான் விரும்பினேன். சில எழுத்தாளர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரே நகரத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான பல புத்தகங்களை எழுதுகின்றனர். அது பாராட்டப்பட வேண்டிய திறமைகளிலொன்று. எனினும் எனக்கு இத் தொகுப்பை எழுதும்போது இந்த இடத்தைத் தாண்டிச் செல்வதே எனது தேவையாக இருந்தது.

            மிகச் சாதாரணமானதொரு எண்ணத்தோடுதான் இப் புத்தகத்தை ஆரம்பித்தேன். ஒரு தந்தை, தனது சிறு பிள்ளைகள் இருவரோடு பாலைவனத்தினூடு காபூல் நகரம் நோக்கிச் செல்லும் சந்தர்ப்பமொன்றின் மூலம் அந்த எண்ணம் விரிவடைகிறது. எல்லாப் பக்கங்களிலும் கிளை விரித்துள்ள மரமொன்றின் தண்டைப் பற்றிய சித்திரம் என்னுள் வரையப்பட்டிருந்தது. அந்தச் சாதாரண எண்ணம் மற்றும் மரத் தண்டின் உருவத்துக்கு மேலதிகமாக வேறெதுவும் கதையொன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலில் பிரான்ஸுக்குச் செல்வது குறித்தும் அங்கிருந்து பிறகு கிரீஸுக்குச் செல்வது குறித்தும் எண்ணம் எதுவும் முதலில் எனக்குள் இருக்கவில்லை. கதையானது, அதுவாகவே படிப்படியாக அவ்வாறு உருவானது. இக் கதையானது எவ்வளவு தூரம் விரிந்து செல்லும் என்பதையும் எவ்வளவு வாழ்க்கைகளை இக் கதையின் மூலம் தொடமுடியும் என்பதையும் தேடிப் பார்ப்பதுவே எனது தேவையாக இருந்தது.

The Kite Runner நாவலுக்கு அடிப்படையாக அமைந்த அனுபவம் எது?

காலித் ஹுஸைனி : அக் கதையானது அதிகளவில் புனைவாகவே எழுதப்பட்டது. ஆனால் 1999 ஆம் ஆண்டின் மழைக்காலத்தில் ஓர் தினம் தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்த செய்தியொன்று அக் கதைக்கு அடிப்படையாக அமைந்தது எனக் கூறலாம். அச் செய்தியில் தலிபான்களைப் பற்றி ஒளிபரப்பப்பட்டது. ஆப்கான் மக்களுக்கு தலிபான்களால் விடுக்கப்படும் பல்வேறு எச்சரிக்கைகள் குறித்து அச் செய்தியில் கூறப்பட்டது. அவர்கள் காற்றாடி விளையாட்டையும் தடை செய்திருப்பாக அச் செய்தியில் அறிவிக்கப்பட்டது. காபூல் நகரத்தில் வாழ்ந்த காலத்தில் எனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் காற்றாடி விட்டு விளையாடிய என்னைத் திகைப்படையச் செய்ய அச் செய்தியால் முடியுமாக இருந்தது.

            ஆகவே அச் செய்தியைச் செவிமடுத்த பிறகு நான் எனது எழுதும் மேசைக்கருகே அமர்ந்து காபூல் நகரத்தில் காற்றாடி விடும் விளையாட்டை விளையாடிய சிறுவர்கள் இருவரைப் பற்றி 25 பக்கங்களில் ஒரு சிறுகதையை எழுதினேன். அது நான் நினைத்ததிலும் பார்க்க, அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் வெற்றிகரமாக எழுதப்பட்ட ஒரு கதையாக அமைந்தது. அதை எழுதி சில வருடங்கள் கடந்த பிற்பாடு, 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அக் கதையை மீண்டும் வாசிக்கும்போது அதனை ஒரு நாவலாக எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அக் கதையை மேலும் செப்பனிட்டும், மேலும் விடயங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியும் நாவலொன்றாக வடிவமைக்கத் தொடங்கினேன். அது பிற்காலத்தில் The Kite Runner நாவலாக அமைந்தது.

நீங்கள் அதன்பிறகு எழுதிய A Thousand Splendid Suns எனும் படைப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்நோக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந் நாவலை எழுத நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : நான் The Kite Runner நாவலை எழுதி முடித்ததுமே இரண்டாவது தொகுப்பையும் எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியிருந்தது. அவ்வாறே பெண்கள் குறித்து எழுத வேண்டுமெனவும் எனக்கு எண்ணமிருந்தது. நான் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற நேரத்தில் யுத்தத்தின் உண்மையான குரூரத்தை நான் எனது கண்களால் நேரடியாக காணக் கூடியதாக இருந்தது. யுத்தத்தின் காரணமாக பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்துள்ள அழுத்தங்கள், அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ள துயரங்கள், இடர்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், தடைகள், சாமான்ய வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள், மகளிர் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, தமது சட்டங்கள், சமூக மற்றும் அரசியல் உரிமைகள் போன்றவற்றுக்காக  முன்வருதல் தடுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் குறித்த கதைகளை நான் செவிமடுக்க நேர்ந்தது.

            அது மிகவும் குரூரமான நிலையென எனக்குத் தோன்றியது. அதே போல அவை அனைத்தினுள்ளும் மிகவும் முக்கியமான கதையொன்று இருப்பதாக எனக்குள் உணர்ந்தேன். நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில் இருந்தபோது, பெண்களைக் குறித்து தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக் கேள்வியுற்றேன். அக் கதைகள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன. அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில் கதையானது கோர்க்கப்பட்ட பிற்பாடு, நான் அதன் மூலமாக A Thousand Splendid Suns நாவலை எழுதினேன்.

A Thousand Splendid Suns நாவலை எழுதியது, The Kite Runner நாவலை எழுதியதை விடவும் சிரமமான காரியமாக அமைந்ததா?

காலித் ஹுஸைனி : மிகவும் கடினமான காரியமாக அமைந்தது. ஒருவரினதல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூக பின்புலத்தைக் கொண்ட, ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்ட பெண்கள் இருவரது கோணத்தில் எழுதுவது உண்மையாகவே ஒரு சவாலாக இருந்தது. அதனால், அநேகமான சந்தர்ப்பங்களில் நான் அதனோடு உண்மையிலேயே போராட வேண்டியிருந்தது. இறுதியில், ஆப்கான் பெண்மணியொருவருக்குப் பொருத்தமான நிஜக் குரலைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை குறித்து தீவிரமாகச் சிந்திப்பதை நிறுத்தியதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு படைக்கப்படத் தொடங்கின.

            இக் கதையில் அச்சங்கள், சிக்கல்கள், எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போதல் மற்றும் ஆளுமையுடன் இணைந்த பல்வேறு அடையாளங்கள் போன்ற நிறைய விடயங்கள் ஒன்றாக இணைந்த மனித வாழ்க்கைகளை முன் வைத்து நான் எழுதினேன். எனவே, அதனாலேதான் ஏதோவோரிடத்தில் அக் கதாபாத்திரங்கள்  அவற்றுக்கு உரித்தான வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டு மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களாகத் தோன்றின.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தமானது உங்கள் தேசத்தின் கலாசாரத்துக்கும் ஆப்கானிஸ்தானுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கும் ஏற்படுத்திய அழுத்தங்கள் எவ்வாறானதென உங்களால் விவரிக்க இயலுமா?

காலித் ஹுஸைனி : அவை, 'இதோ இவ்வளவுதான்' எனக் காட்ட முடியாத அளவுக்கு மிகப் பாரிய அழுத்தங்கள். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம். உலகில் ஆப்பிரிக்காவுக்கு உரித்தற்ற வறிய நாடுகளிடையே ஒன்றாகக் கருதப்படும் நாடாக அது மாறியிருக்கிறது. உலகில் 218 ஆவது மட்டத்திலிருக்கும் கரடுமுரடான நில உற்பத்திகளோடு, மக்கள் தொகையில் நூற்றுக்கு முப்பது சதவீதமானோர் வறுமையின் கடைநிலைக்கும் கீழிருக்கும் நிலையே இப்போது எமது நாட்டிலிருக்கிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பற்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியிருக்கிறது.

            பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 57 இலட்சமளவு பெருந்தொகையான மக்கள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டு வந்த மக்கள், ஆப்கானிஸ்தானில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது மிகவும் சிரமமான  காரியமாக மாறியிருக்கிறது. மீண்டும் வழமை போல, முன்பிருந்தது போன்று தமக்கு நன்கு தெரிந்த மக்கள் சமூகத்தோடு இணைந்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாக ஆகியிருக்கிறது. இதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியின் அவசியத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று கிராம மட்டத்தில் மக்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத் தீர்வொன்று தேவையற்றதெனக் கூறுவது சம்பந்தமாக நாம் அனைவருமே இப்பொழுது ஒரு பொதுவான இணக்கத்துக்கு வந்திருக்கிறோம்.
 
 - எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ் 
# எங்கள் தேசம்
# எதுவரை
# இனியொரு
# திண்ணை
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்