Monday, August 14, 2017

இஸ்லாமிய மையித்துக்கள் குறித்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் ! - எம்.ரிஷான் ஷெரீப்





   அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள சில பிரதேசங்களில் வசித்த இஸ்லாமியர்களின் மையித்துக்கள், அவை அடக்கப்பட்டதன் பிறகு அரசாங்க உத்தரவின் பேரில் திரும்பத் தோண்ட வைக்கப்பட்ட தகவல்களை அதிகமாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நவீன வசதிகளுடன் கூடிய இக்காலத்தில் ஜனாஸாக்கள் தொடர்பான அறிவித்தல்கள் உடனுக்குடன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிவிக்கப்பட்டு, தொலைவில் இருப்பவர்களும் கூட அவசரமாக இறுதிச் சடங்குகளுக்கு வந்து விடும் நிலைமை எங்கும்  காணப்படுகிறது. என்றபோதிலும் மையித்தின் குடும்பத்தவர்களும், வீட்டினரும் விடும் சிறு தவறுகளாலும், கவனயீனங்களாலும் அடக்கப்பட்ட ஜனாஸாக்கள் திரும்பத் தோண்டப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதை காணக் கூடியதாக இருக்கிறது.
 
     இலங்கையிலுள்ள இஸ்லாமியப் பிரதேசங்களில் வசித்து மரணத்துக்குள்ளாகும் நபர்களின் மையித்துக்களை விடவும், வேற்று மத சமூக மக்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களிலுள்ள இஸ்லாமியர்களின் மரணங்களே இவ்வாறாக அதிகம் கேள்விக்குள்ளாகின்றன. முஸ்லிம்களில் ஒருவர் மரணித்ததும்  இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் அம் மையித்தினது இறுதிச் சடங்குகள் பூர்த்தியாவதை பிற சமூகத்தினர் வியப்பாகப் பார்க்கும் அதே வேளை, அவர்களுள் மரணத்தைக் குறித்து சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

     மரணித்தவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களோடு  நட்பாகப் பழகிவிட்டு, மரணத்தின் காரணமாக இவ்வாறாக திடீரென பிரிய நேர்ந்ததன் துக்கம் சார்ந்த வெளிப்பாடாகக் கொள்ளத்தக்க அவ்வாறானவர்களின் கேள்விகள் சில சமயங்களில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. அதன் பிறகு காவல்துறையும் இவ் விடயத்தில் தலையிட்டு, ஜனாஸாவை மீளவும் தோண்டியெடுக்க உத்தரவிடுகின்றன.

     இந்த விடயத்தை மிகவும் எளிதாகத் தவிர்க்கக் கூடிய விதமாக மையித்துக்கள் சம்பந்தமாகவும், மையித்தைச் சார்ந்தவர்கள் மரணம் நிகழ்ந்ததும் உடனடியாக எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.


     இலங்கையில் எப் பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருப்பினும், தமது வீட்டில் ஒரு மரணம் நிகழுமிடத்து, அது அன்றுதான் பிறந்த கைக்குழந்தையாக இருப்பினும் கூட உடனடியாக அப் பிரதேசத்துக்குரிய கிராம சேவை அலுவலகரிடம் அறியக் கொடுங்கள். அரசாங்கமானது, ஒவ்வொரு பிரதேசத்துக்குமென நியமித்திருக்கும் கிராம சேவகர், மரணித்தவர் சார்பான மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும், மரணம் தொடர்பாக பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமிடத்து காவல்துறையோடு தொடர்புகொள்ளவும் உதவுவார். மையித்தை வீட்டில் வைத்துக் கொண்டு இக்கட்டான தருணத்தில் இருக்கும் குடும்பத்தினரால் இவ்விதமாக தகவல் தெரிவிக்க இயலாமல் போகும் வாய்ப்பு அதிகம். அதனால் அயல்வீட்டினரும், ஊரவர்களும், அப் பிரதேச பள்ளிவாயல் நிர்வாக சபைகளும் இவ் விடயத்தில் உடனடியாக உதவி செய்ய வேண்டும்.


     வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானவரின் மையித்து சம்பந்தமான விபரங்களைக் குறித்து வைத்திய அதிகாரிகள் அறியத் தருவார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் ஒருவர் இயற்கையாக மரணித்திருப்பினும், அகால மரணமடைந்திருப்பினும் உடனடியாக கிராம சேவகருக்கு அறியத் தருவது முக்கியமானது. அவ்வாறே மையித்துக்கான மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுமெனில், அருகிலிருக்கும் வைத்தியருக்கும் மரணம் குறித்து அறியத் தருவது நல்லது. மரணித்தவர் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தால் அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த வைத்தியருக்கு மரணம் சம்பந்தமாக உடனடியாக அறியத் தர வேண்டும். அவர் மரணித்தவருக்கான மருத்துவச் சான்றிதழைப் பெற்றுத் தர உதவுவார்.


     தாம் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் மரணித்து விட்டால், அவரது ஜனாஸாவைப் பார்வையிட சமூகமளிப்பது, வைத்திய சட்ட விதிமுறைகளின் பிரகாரம், ஒரு வைத்தியரது கடமையாகும். சட்ட ரீதியாக மரணம் சம்பந்தமான விசாரணைகள் ஏதேனும் நடைபெறுமாயின் அந் நேரத்தில் நோய் சம்பந்தமான தகுந்த ஆதாரங்களை அவ் வைத்தியர் முன்வைக்க வேண்டும். மரணித்தவருக்கான மருத்துவ சான்றிதழை மிகுந்த கவனத்தோடும், தெளிவாகவும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.


     மருத்துவ பரிசோதனைக்காக ஜனாஸாவின் உடலை வெட்டிப் பார்ப்பார்களோ என்ற அச்சத்தில் வைத்திய அதிகாரிகளுக்கு மரண அறிவித்தலைத் தெரிவிக்காமல் மறைத்து வைக்கும் பழக்கம் நம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, இயற்கையாக மரணித்தவருக்கான மருத்துவச் சான்றிதழ் என்பது மரணத்துக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தும் மருத்துவச் சான்றிதழ் ஆகும். இது பிரேத பரிசோதனை அறிக்கை அல்ல. எனவே மையித்தை வெட்டிப் பார்ப்பது இங்கு அவசியப்படாது.


     இயற்கை மரணங்களின் போது, இச் சான்றிதழை ஜனாஸாவின் உடலை வெட்டாது சான்றிதழாகக் கொடுக்க வைத்தியர்களுக்கு அனுமதியுண்டு. அதற்கு மரணத்திற்கான காரணம் தெளிவானதாக இருக்க வேண்டும். மரணம் இயற்கை மரணமாக இருக்க வேண்டும். வைத்தியர் நேரடியாக மையித்தைப் பார்வையிடுபவராக இருக்க வேண்டும். மரணமானவர் முன்னர் பெற்றுக் கொண்ட சிகிச்சைகளை சம்பந்தப்பட்ட வைத்தியர் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு மரணித்தவருக்கு முன்னர் சிகிச்சை அளித்திருப்பவராக இருப்பது சிறந்தது.


     ஒருவர் மரணித்த பிறகு அவரது ‘மரணத்துக்கான மருத்துவச் சான்றிதழ்’ ஏன் அவசியமாகிறது என்ற கேள்வி இங்கு எழக் கூடும். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் மரணத்துக்கான மருத்துவச் சான்றிதழானது, இரு வகைகளில் பயன்படுகின்றன. முதலாவது, அது மரணித்தவரது மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ். அந்தச் சான்றிதழானது, அவரது குடும்பத்தவர்களுக்கு, பிற்காலத்தில் அந் நபரது காப்புறுதித் தொகையையோ, இழப்பீட்டுப் பணத்தையோ, ஏனைய அரச கொடுப்பனவுகளையோ, சேமிப்புத் தொகையையோ, வேலைவாய்ப்பையோ பெற்றுக் கொடுக்கவும், திருமணம் மற்றும் சொத்து பரிமாற்றங்களின் போதும் முன்வைக்கப்பட வேண்டிய மிகவும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இரண்டாவது, அந்தச் சான்றிதழானது அரசாங்க புள்ளிவிபரங்களுக்கும், மருத்துவ ஆய்வுகளுக்கும், சுகாதார நலத் திட்டங்களுக்கும் வெகுவாகப் பயன்படுகின்றது.


     அகால மரணங்களின் போது, பரிசோதிக்கும் வைத்தியரின் கூற்றுப் படியும், சட்ட அலுவலர்களின் கட்டளைப் பிரகாரமும், நீதிமன்ற உத்தரவுப்படியும், விசாரணை நடவடிக்கைகளுக்காகவும் மையித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை அவசியமாகின்றது. மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடத்தப்படும் பிரேத பரிசோதனை தேவைப்படும் அகால மரணங்களுள் கீழுள்ளவை பிரதானமாகக் கொள்ளப்படுகின்றன.


  • ·         தற்கொலை

  • ·         விலங்குகள் தாக்கியோ, தீண்டியோ மரணமாதல்

  • ·         இயந்திரங்களில் சிக்கி மரணமாதல்

  • ·         விபத்துக்களில் சிக்கி மரணமாதல்

  • ·         திடீர் மரணம்

  • ·         காவல்நிலையத்திலோ, சிறைச்சாலையிலோ, மனநல விடுதியிலோ, தொழுநோய் மருத்துவமனையிலோ நிகழும் மரணம்

  • ·         வன்முறைகளில் சிக்கி மரணமாதல்

  • ·         சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமாதல்

  • ·         மரணமான நிலையில் கண்டெடுக்கப்படும் சடலங்கள்

  • ·         வேறு நபரொருவரது நடவடிக்கையால் மரணமாதல்

  • ·         கொலை


    
     மேலுள்ளவாறான அகால மரணங்கள் ஒரு பிரதேசத்தில் நிகழ்ந்தவுடனேயே அண்மையிலிருக்கும் காவல் நிலையத்துக்கும், கிராம சேவகருக்கும் அத் தகவலைத் தெரிவிக்காதிருப்பது தவறாகும். அவ்வாறு அறிவித்தும் உடனடியாக வருகை தராத கிராம சேவகர்கள் இருப்பின், வர முடியாததற்கான தகுந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்காதிருப்பின் அது குறித்தும் காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யலாம். தகவல் அறியக் கிடைத்ததும் கிராம சேவகர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனடியாக வருகை தந்து அடுத்து செய்ய வேண்டிய கருமங்கள் என்ன என்பதைத் தெரிவிப்பார். அதன் பிரகாரம் நடந்து கொள்ளும்பட்சத்தில் தொடர்ந்து வரும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடாது.


     நமது சமூகத்தில் மக்கள் இந்த இடத்திலேயே தவறிழைக்கிறார்கள். கிராம சேவகர், முக்கியமாக அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருப்பின், அவருக்கெல்லாம் ஜனாஸா  சம்பந்தமான தகவல்களை ஏன் தெரிவிக்க வேண்டும் என்ற மனப்பாங்கோடு அநேகமானோர் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். இதனால் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பின்னர் மையித்து தொடர்பான தகவல்களை அவரோ, காவல்துறையோ தெரிந்துகொண்டு தகுந்த காரணங்களுக்காக மையித்தைத் தோண்டியெடுத்துக் காட்டும்படி உத்தரவிடும்போது அவர்களைக் குற்றம் கூற முடியாது. இன்றுவரை இலங்கையில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்று விட்டன.


     எனவே இலங்கையிலிருக்கும் எமது சமூகத்து மக்கள் ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இக் கட்டுரையை வாசிப்பவர்கள், உங்கள் நண்பர்களுக்கும் இத் தகவலை விபரமாக எடுத்துக் கூறுங்கள். பள்ளிவாசல்கள், பிரசங்கங்களின் மூலமாக ஊர் மக்கள் அனைவரிடத்திலும் இந்த விடயத்தை எத்தி வைக்கலாம். மரணம் எவருக்கும் எந்த நேரத்திலும் நிகழலாம். அது நிகழ்ந்ததன் பிறகு இறுதிச் சடங்குகள் கூட ஜனாஸாவுக்கு உபத்திரவமில்லாது கண்ணியமானதாக நிகழ்வதே சிறப்பானதாகும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - விடிவெள்ளி வார இதழ், கல்குடா நேசன், Madawala News

Tuesday, July 11, 2017

யானைகளின் மரணங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்



  
    ண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி என்பது என்ன? அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம்? இயன்றவரை காடுகளை அழித்து, மழையைத் தடுத்து, மனிதக் குடியிருப்புக்களை உருவாக்கி விடுகிறோம். பாதைகளை, புகையிரதத் தண்டவாளங்களை  நிர்மாணிக்கிறோம். அதுவரையில் தமது நிலங்களில் பத்திரமாக இருந்த யானைகள் இப் புதிய மாற்றங்களைக் கண்டு அரண்டு விடுகின்றன. அம் மிரட்சியே, அந்த ஜந்துக்களை முரட்டுத்தனமாகவும் மாற்றிவிடுகின்றன. தமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எவற்றின் மீதும் இவ்விதமான முரட்டுத்தனங்களைப் பிரதிபலிப்பது, உயிர்ஜீவிகளின் இயல்பு இல்லையா?

      இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்து யானை வேட்டை எனும் விளையாட்டு மிகப் பிரசித்தமானதாக இருந்திருக்கிறது. அதன் சித்திரங்களை வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்த பிரித்தானிய ஆளுநர்கள், யானை வேட்டைக்கு வெளிநாட்டுவாசிகளை வரும்படி ஈர்த்திருக்கிறார்கள். இவ் வேட்டைக்கு உதவியாக கிராம மக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ் வெள்ளையர்கள், கிராம மக்களின் உதவியோடு காட்டு யானைகளைக் கொன்று அதை ஒரு விளையாட்டாகவும், தம்மை வேட்டைக்கார வீரர்களாகவும் பிரதிபலித்து பெருமை கொண்டிருக்கிறார்கள்.


      இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் ஒன்றான பதுளையில் பிரபலமான  St. Marks Anglican Church’ பள்ளியை நிர்மாணித்த Major Thomas William Rogers ( 1804 -1845) இலங்கையில் பாதைகளையும் நிர்மாணித்திருக்கிறார். என்றாலும், இப்போது அவர் இலங்கையில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்ற ஒரு கொலைகார வேட்டைக்காரனாகவே மக்களால் அறியப்படுகிறார். விலங்குகளைக் கொல்வதற்காக வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையை பாமர மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததும் இவரே. உயிர் கொல்லும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயங்கிய ஊர் மக்களிடம், ‘இதனைப் பயன்படுத்துவதன் மூலம் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கலாம்’ எனப் போதித்திருக்கிறார்.  1834 முதல் 1845 வரையான 11 வருட காலப்பகுதியில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்று அக் காலத்தில் பிரபலமான வேட்டைக்காரர் என அறியப்பட்ட இவர், இன்று வரலாற்றில் ஒரு கொலைகாரராகவே பதியப்பட்டிருக்கிறார். இவரது மரணமும் கூட, இயற்கை அளித்த தண்டனையாக, மின்னல் தாக்கியே நிகழ்ந்திருக்கிறது. இவரதும், இவரது யானை வேட்டைகள் குறித்த பிரசித்தமான சரித்திரங்களையும் ‘The Fate of Major Rogers: A Buddhist Mystery of Ceylon’, The Wild Elephant in Ceylon’ ஆகிய தொகுப்புக்களில் வாசிக்கலாம்.

  

    இப்போதும் கூட உலகில் யானை வேட்டை என்பது பணம் படைத்தவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் பெரும் விளையாட்டு. அண்மையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. உணவை மென்று கொண்டிருந்த யானையொன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீழ்த்தி, அதனருகே பிள்ளைகளோடு பெருமையோடு நின்று புகைப்படமெடுத்து தம்மை வீரர்கள் எனச் சித்தரிக்க முயலும் ஒரு தம்பதியின் புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தது. இப் படுகொலை மூலம் இவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்? தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும் கூட, அதனை மட்டுப்படுத்த அவற்றை வேட்டையாடுவது ஒன்றேதான் வழிமுறையா என்ன?

      னது சிறுவயது முதல் ஒரு நண்பனைப் போல, எனது வீட்டினருகே வளர்ந்து வந்த கொம்பன் யானை, சில வருடங்களுக்கு முன்னால் மின்னல் தாக்குதலில் பலியானது. தோட்டத்தில் அதைப் பிணைத்திருந்த சங்கிலியினூடாக மின்னல் பாய்ந்ததில் ஓர் மழை இரவில் அது மரித்து வீழ்ந்தது. அது மரணிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் நான் எடுத்த புகைப்படமே இங்கிருக்கிறது. அந்த யானை மரித்ததும், ஒரு விலங்கெனப் பார்க்காது, சடலத்தைப் பார்வையிட பல ஊர்களிலிருந்தும், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் மிகவும் சிறப்பாக சகல வித கௌரவத்தோடும் நடைபெற்றன. அனைத்து மக்களும் அந்தக் கொம்பனை நேசித்ததற்குக் காரணமிருக்கிறது.

      குழந்தைகளை யானையின் மடியின் கீழால் கொண்டு சென்றால், அக் குழந்தைகளைப் பீடித்திருக்கும், பீடிக்கப் போகும் நோய், பிணி, இன்னல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதாக மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. எனவே அதன் பிரகாரம் அந்த யானையின் பாதங்களுக்கிடையே ஊர் மக்களில் பெரும்பாலானோர் தம் சிறுவயதில் போய் வந்திருக்கிறார்கள். கண்ணீர் ததும்பிய முகங்களோடு அவர்கள் யானையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டமையானது, காலாகாலத்துக்கும் அவர்களின் இன்னல்களை நீக்கிய பெருமையை ஏதுமறியா அந்த அப்பாவி ஜீவன் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றியது.

      இலங்கையில் யானைகளை வருடந்தோறும் நடைபெறும் ‘பெரஹர’ எனும் பௌத்த மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் போலவே பட்டு வண்ணத் துணிகளாலும், பளபளக்கும் சிறு விளக்குகளாலும் யானைகளை அலங்கரிப்பார்கள். அவை பெருந்தெருவில் ஊர்வலமாகச் செல்லும். இந் நடைமுறை கேரளாவிலிருந்தே வந்திருக்கக் கூடும். ஒரு முரண்நகையாக இலங்கையின் பௌத்த மத ஊர்வலத்தின் முதல் யானைப் பாகன் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பணிக்கர் என அறியப்படும் அவரதும், யானையினதும் புகைப்படங்களை இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டதன் மூலம் கடந்த நூற்றாண்டு முதல் பல தசாப்தங்களாக கௌரவித்து வருகிறது இலங்கை அரசு.

      லங்கையில் புகையிரதங்களில் மோதுண்டு இறந்துவிடுபவை, அதிவேகப் பாதை வாகனங்களில் மோதி இறப்பவை, பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுந்து இறப்பவை, மக்கள் குடியிருப்புக்களில் அத்துமீறி நுழைவதால் மின்சார வேலியும், கண்ணிவெடிகளும், வெடிகுண்டுகளும் கொல்பவை என வருடத்துக்கு குறைந்தது நூறு யானைகளேனும் அகாலமாக மரணித்து விடுகின்றன. தந்தத்துக்காகக் கொல்லப்படுவது சம்பந்தமான யானைகளின் மரண அறிக்கைகள் முன்பு நிறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை குறைந்திருக்கிறது. அறவே இல்லையென்று சொல்வதற்கில்லை.

  
    ஆனால் தற்காலத்தில் இலங்கையில் யானைகளின் மரணங்கள் அதிகமாக நிகழ்வது ஆயுதங்களால் அல்ல. யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, நலிவடையாத குப்பைகள் அண்மைக்காலமாக யானைகளை மரணத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையின் வனங்களில் சஞ்சரிக்கச் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் காடுகளில் விட்டு வரும் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை யானைகளால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. யானைகளால் விழுங்கப்படும் அவை செரிக்காது, உடலிலிருந்து வெளியேறாது அடைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று விடுகின்றன. அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மரணித்த யானைகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்து இதனை உறுதிப்படுத்த முடிந்தது.

      என்னதான் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல அறிக்கைகள் விடப்பட்ட போதிலும், இலகுவையும் வசதியையும் கருத்திற்கொண்டு, எங்கேயோ வீசி விட்டு வருவதற்குத்தானே என்ற மனப்பாங்கோடு அநேகமான மக்கள் இன்னும் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வலிய விலங்கு என்பதனால் யானையின் மரணம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. பொலிதீன், பிளாஸ்டிக்கை உட்கொண்டு தினந்தோறும் எத்தனை எத்தனையோ வன விலங்குகளும், பட்சிகளும், மீன்களும், ஆமைகளும் நாமறியாது மரித்துக் கொண்டேயிருக்கின்றன.

      நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையோடு இணைந்து வாழும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடிய மரணத்தை ஒருபோதும் இயற்கை அளிப்பதில்லை. நாம்தான் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறோம். மரிக்கும் அந்த உயிர்களின் மூலமாகப் பாடம் கற்று, இனி எந்தவொரு உயிரும் அவ்வாறு மரிக்காதிருக்க, நீதமான எந்தவொரு தீர்ப்பையும் வழங்க யாருமேயில்லை என்பதுதான் நிஜம். காட்டு யானைகளைக் கொல்தல் என்பது செல்வந்தர்களுக்கு ஒரு வீர விளையாட்டு. விவசாய நிலங்களைக் கொண்ட ஏழைகளுக்கு ஒரு ஆபத்து நீங்கல். படித்தவர்களுக்கு அக் கணத்தைக் கடந்துபோக ஒரு செய்தி மாத்திரமே.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - எழுத்தாளர் ஜெயமோகன்

Wednesday, June 21, 2017

எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு மொழிபெயர்ப்புக்கான இயல் விருது



     சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

      இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது  'இறுதி மணித்தியாலம்' எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

      இக் கணத்தில், எப்போதும் ஊக்கம் தந்து என்னுடனேயே பயணிக்கும் சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹானை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வதோடு, இக் கவிதைகளைத் தொகுப்பாக வெளியிடத் தேர்ந்தெடுத்த வம்சி பதிப்பகத்துக்கும், இயல் விருதினை வழங்கி கௌரவிக்கும் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துக்கும், எழுதவும், மொழிபெயர்க்கவும் எப்போதும் ஊக்கமளிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், அன்பும் என்றும் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
21.06.2017